செய்திகள்
கோப்பு படம்

நாகர்கோவிலில் காதல் திருமணம் செய்த பெண் ‘திடீர்’ மரணம் - தாய் புகார்

Published On 2020-02-13 12:15 GMT   |   Update On 2020-02-13 12:15 GMT
நாகர்கோவில் அருகே காதல் திருமணம் செய்த பெண் வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டதாக அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
என்.ஜி.ஓ. காலனி:

நாகர்கோவில் பீச் ரோடு வட்டவிளையை சேர்ந்தவர் சதாசிவன். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியின் மகள் ஸ்ரீஜா (வயது 25).

ஸ்ரீஜாவும், தெங்கம்புதூர் அருகே உள்ள பணிக்கன் குடியிருப்பை சேர்ந்த சிவன் என்பவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீஜாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரை கணவர் தாய் வீட்டில் விட்டு விட்டு சென்றார். இதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அவரை சிகிச்சைக்காக பெற்றோர் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ஸ்ரீஜா இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து ஸ்ரீஜாவின் தாயார் செல்வி சுசீந்திரம் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்து உள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது மகள் ஸ்ரீஜா 6 வருடத்திற்கு முன்பு சிவனை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஸ்ரீஜாவை அவரது கணவர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி உள்ளார். கடந்த 2½ ஆண்டுகளாக எனது மகளை பார்க்கக்கூட அவரது கணவர் அனுமதிக்க வில்லை. போனிலும் மகளுடன் பேச முடியவில்லை. இந்த நிலையில் அவருக்கு உடல்நிலை பாதித்ததாக கூறி வீட்டில் விட்டுவிட்டு கணவர் சென்றுவிட்டார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீஜா இறந்துவிட்டார்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதுபற்றி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ஸ்ரீஜா மரணம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற உள்ளது.
Tags:    

Similar News