குடும்ப தகராறில் உறவினரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது
கோவை:
கோவை இடையர் பாளையம் அருகே உள்ள கிருஷ்ணதேவர் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 46). கூலித் தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக தனலட்சுமி தனது கணவரை பிரிந்து வெள்ளலூர் வெள்ளாம் பாளையத்தில் உள்ள தனது சகோதரரி வீட்டில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று வெள்ளாம் பாளையத்துக்கு சென்ற ராஜேந்திரன், மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனை தனலட்சுமியின் அக்காள் கணவர் சவுந்தர்ராஜன் (52) என்பவர் தட்டி கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து சவுந்தர்ராஜனின் இடது பக்க வயிற்றில் குத்தி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சவுந்தர் ராஜனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜேந்திரனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.