செய்திகள்
காதல் திருமணம் செய்து கொண்ட சஞ்சயா- அன்பழகன், ரசிகா- மணிமாறன்,

பாபநாசம் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரே நாளில் 2 காதல் ஜோடிகளுக்கு திருமணம்

Published On 2020-02-10 10:46 GMT   |   Update On 2020-02-10 10:46 GMT
ஒரே நாளில் பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 6 மாதம் கர்ப்பிணியான 2 காதல் ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

பாபநாசம்:

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே வாழ்க்கை கிராமம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரசிகா(வயது 19) 9-ம் வகுப்புவரை படித்தவர். இவரது சொந்த ஊர் நாகப்பட்டினம் அக்கரைப் பேட்டையை சேர்ந்தவர். இவரது பெற்றோர்கள் சுனாமியில் இறந்துவிட்டனர். பின்னர் தனது அண்ணன் சுதாகருடன் ரசிகா வாழ்க்கை கிராமத்தில் இருந்து வந்துள்ளார்.

இளங்கார்குடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிமாறன்(22 டி.எம்.இ.படித்தவர். இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

பின்னர் திருப்பூருக்கு காதல் ஜோடிகள் இருவரும் சென்று அங்கு தனியார் கம்பெனியில் வேலை பார்த்துள்ளனர். இந்த நிலையில் ரசிகா 6 மாதம் கர்ப்பிணியானார். அதன் பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்வதற்கு ஏற்பாடு செய்தனர்.

இந்த திருமணத்திற்கு மணமகன் வீட்டார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே ரசிகா பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் உமாராணி மற்றும் மகளிர் போலீசார்கள் காதலனை அழைத்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு ரசிகாவை மணிமாறன் பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார்.

திருவையாறு தாலுக்கா திருப்பந்துருத்தி தெற்கு தெருவை சேர்ந்தவர் சஞ்சயா (வயது20) பிளஸ்-2 படித்தவர்.

திருவையாறு தாலுக்கா அரசூர் கிராமம், கீழத் தெருவை சேர்ந்தவர் அன்பழகன்(21) பிளஸ் -2 படித்தவர். இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

பின்னர் காதல் ஜோடிகள் இருவரும் திருப்பூருக்கு சென்று அங்கேயே தங்கி தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். அதன்பிறகு சஞ்சயா 6 மாதம் கர்ப்பிணியானார்.

காதல் ஜோடிகள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு ஏற்பாடு செய்தனர். இந்த திருமணத்திற்கு மணமகள் வீட்டார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே சஞ்சயா பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மகளிர் போலீசார் காதல் ஜோடிகள் இருவரையும் அழைத்து இரு வீட்டார் சம்மதத்துடன் சமரசம் செய்து வைத்து திருமணம் செய்து வைத்தனர்.

Tags:    

Similar News