செய்திகள்
அதிமுக வெற்றியை எதிர்த்து திருமாவளவன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
காட்டுமன்னார் கோவில் தொகுதியில் அதிமுக வெற்றியை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை:
தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அப்போது காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் முருகுமாறன் போட்டியிட்டார். இதில், 87 ஓட்டுகள் அதிகம் பெற்று முருகுமாறன் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொல்.திருமாவளவன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்து வருகிறார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தபால் ஓட்டுகளின்போது நிராகரிக்கப்பட்ட 102 தபால் ஓட்டுகளுடன் காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதி தேர்தல் அதிகாரி ஆர்.முத்துக்குமாரசுவாமி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிடையே, இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, நிராகரிக்கப்பட்ட 102 தபால் ஓட்டுகளுடன் தற்போதைய தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தேர்தல் அதிகாரி ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, காட்டுமன்னார் கோவில் தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முருகுமாறன் பெற்ற வெற்றி செல்லும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அ.தி.மு.க. வேட்பாளர் முருகுமாறன் வெற்றியை எதிர்த்து திருமாவளவன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.