சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றிக்கு பாடுபடுவோம்- முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் பேட்டி
மதுரை:
முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைய உள்ளார். இதற்கான விழா வருகிற 23-ந்தேதி மதுரையில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் 50 ஆண்டு காலமாக செயல்பட்டு கொண்டிருக்கும் தி.மு.க. தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக இயங்கி வருகிறது. 12 கோடி மக்களின் உரிமையை பாதுகாக்கக்கூடியவராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற அவரோடு இணைந்து பணியாற்றுவோம்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. இந்திய அளவில் மகத்தான வெற்றி பெற்றதை யாராலும் மறுக்க முடியாது. எதிர்காலத்தில் தமிழகத்தை வழிநடத்த சரியான தலைவர் மு.க.ஸ்டாலின்தான். அதனால் அவரோடு இணைந்து செயல்பட உள்ளோம்.
இந்தியா மதசார்பற்ற நாடு. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் அதற்கெதிரானது. இதுபற்றி ரஜினி கூறிய கருத்து சரியல்ல. மாணவர்கள் போராட்டம் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி, மணிமாறன் ஆகியோர் பேட்டியின்போது உடன் இருந்தனர். தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் அவர்கள் பங்கேற்றனர்.