செய்திகள்
தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை- முதலமைச்சரிடம் சீமான் கோரிக்கை
தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை விடப்பட வேண்டும் என முதலமைச்சரிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை விடப்பட வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
இந்த சந்திப்பிற்குப் பிறகு சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை விடப்படவேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். மலேசியாவிலேயே தைப்பூசத்தற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
நடிகர் விஜய்யை விட அதிகமாக சம்பளம் வாங்குபவர் யார் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு படத்திற்கு ஜிஎஸ்டி வரியோடு சேர்த்து 126 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் அந்த நபர் (ரஜினி). 66 லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்பதையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.
தஞ்சையில் தமிழில் குடமுழுக்கு நடப்பதை மறைக்கவே திடீரென ரஜினி வெளியே வந்து பேட்டி கொடுக்கிறார்.
அன்புச்செழியன் சினிமா பைனான்சியர் இல்லை. அவர் சினிமாவிற்கு பைனான்ஸ் தருவதில்லை. நான் படம் எடுக்க பணம் கேட்டபோது எனக்கு அவர் பணம் தரவில்லை.
இவ்வாறு சீமான் கூறினார்.