செய்திகள்
திமுக

தி.மு.க. உறுப்பினர் கார்டுகளை உரியவர்களிடம் ஒப்படைக்க ‘கெடு’

Published On 2020-02-06 08:33 GMT   |   Update On 2020-02-06 08:38 GMT
கட்சி பிரமுகர்களிடம் இருக்கும் தி.மு.க. உறுப்பினர் கார்டுகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அக்கட்சி தலைமை கெடு விதித்துள்ளது.
சென்னை:

தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. 15-வது பொதுத் தேர்தலுக்காக புதிய, புதிப்பிக்கப்பட்ட உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் (கார்டு) தலைமைக் கழகப் பிரதிநிதிகளைக் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும், ஊராட்சிக் கழக வாரியாக வழங்கும் பணி முடிவடைந்துள்ளது.

அதன் பிறகு, தலைமைக்கு வரப்பெற்ற திருத்தங்களையும் தலைமைக் கழகத்தால் திருத்தம் செய்யப்பட்டு அவைகளும் உரியவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில வார்டு, ஒன்றியங்களின் உறுப்பினர் சீட்டுகளை ஆங்காங்கே உள்ள ஒரு சிலர் மொத்தமாக வைத்துக் கொண்டு உறுப்பினர்களுக்கு இதுவரை வழங்கவில்லை என்ற புகார்கள் தலைமைக் கழகத்துக்கு வந்த வண்ணம் உள்ளன.

மேலும், கழகப் பொதுக்குழுவில் திருத்தப்பட்ட சட்ட திட்டத்தின் அடிப்படையில், ஏற்கனவே 13-வது பொதுத்தேர்தலில் நடைபெற்ற கிளைக் கழக அமைப்பு தேர்தலின்படி, தற்போது கிளைக் கழக வாரியாக தேர்தல் நடைபெற உள்ளதால், உறுப்பினர் உரிமைச் சீட்டுக்களை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், ஒப்படைத்ததை உறுதி செய்து தலைமைக் கழகத்துக்கு கடிதம் எழுத வேண்டுமென்றும் ஊராட்சி, பேரூர், ஒன்றிய, நகர, பகுதிக் கழகச் செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அதற்குப் பின்னரும் உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் உரியவர்களிடம் வழங்கப்படவில்லை என்ற புகார் தலைமைக் கழகத்துக்கு வருமேயானால், தலைமைக் கழகத்தால் அப்புகார்கள் முறையாக விசாரிக்கப்பட்டு, புகாருக்கு உரியவர்கள் கழகத்தின் எந்தப் பொறுப்புக்கும் போட்டியிடும் தகுதி இழந்தவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News