களக்காடு அருகே மொபட் மீது லாரி மோதி தாய்-மகள் காயம்
களக்காடு:
களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் இசக்கியப்பன். இவரது மகள் கஸ்தூரி (வயது 19). இவர் நெல்லையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் தாய் சுந்தரியுடன் களக்காடு வந்தார். பின்னர் களக்காட்டில் இருந்து வீட்டிற்கு இருவரும் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
நாங்குநேரி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் வந்த போது பின்னால் வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் கஸ்தூரியும், அவரது தாய் சுந்தரியும் காயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்று விட்டது. இது குறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் நிற்காமல் சென்ற லாரியை ஓட்டியது தென்காசி அருகே உள்ள ஊத்துமலை கிருஷ்ணாநகரை சேர்ந்த முத்தையா மகன் கருப்பசாமி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.