செய்திகள்
முக ஸ்டாலின்

பொதுத்தேர்வு ரத்தில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்- முக ஸ்டாலின்

Published On 2020-02-04 15:13 GMT   |   Update On 2020-02-04 15:13 GMT
5,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து என்ற உத்தரவில் அரசு தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இந்த ஆண்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்தது. இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமையும் என்று கல்வியாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. 

கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த ஆணையை திரும்ப பெறப்போவதில்லை எனவும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பெற்றோர்கள், ஆசிரியர்கள் தரப்பிலும் எதிர்ப்புகள் வலுத்தன.

இந்நிலையில், 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக  தமிழக அரசு அறிவித்துள்ளது. 

‘மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது. 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பழைய நடைமுறைப்படியே தேர்வு நடத்தப்படும்’ என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:-

5,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து என்ற உத்தரவில்  அரசு தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கைக்கு அதிமுக கடும் எதிர்ப்பைத் தெரிவித்து கல்வி உரிமையை நிலைநாட்ட வேண்டும். மாணவர்கள் கல்வி உரிமையை பறித்து எதிர்காலத்தைப் பாழாக்கும் 5, 8 ஆம் தேர்வை திமுக எதிர்த்தது. திமுக கோரிக்கைக்கு ஆட்சியாளர்கள் செவிமடுக்க மறுத்து அமைதி காத்தனர். திடீர் ஞானோதயம் ஏற்பட்டது போல 5, 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை அரசு ரத்து செய்துள்ளது. 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News