தொண்டி அரசு பள்ளியில் கம்ப்யூட்டர்கள் திருட்டு
தொண்டி:
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொண்டி-மதுரை சாலையில் உள்ளது.
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 233 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் அறை அருகே கணிப்பொறி வைப்பு அறை உள்ளது. ஆன்-லைன் தேர்வு மற்றும் பள்ளி சம்பந்தமான விவரங்கள் பதியப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு கணிப்பொறி வைப்பு அறை இரும்புக் கதவில் போடப்பட்ட பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் உள்ளே இருந்த 3-கணிப்பொறி, 3-சி.பி.யு., 1-சர்வர் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர். இவற்றின் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என தெரிகிறது.
காலையில் பள்ளி வளாகத்திற்குள் நடைப் பயிற்சி, உடற்பயிற்சி செய்யவருபவர்கள் கதவு திறந்திருப்பதாக தகவல் கொடுத்ததைத்தொடர்ந்து தொண்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை பார்த்து விசாரணை நடத்தி வருகிறார்.
அதில் முகமூடி ஏதும் அணியாத ஒருவர் கணிப்பொறி அறைக்குள் நுழைந்து சுவிட்சுகளை அணைப்பது பதிவாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து கணிப்பொறி திருடிய நபர் யார்? என கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.