கருங்கல் அருகே பெண்னை தாக்கி 9 பவுன் நகை பறிப்பு
நாகர்கோவில்:
கருங்கல் புங்கரை பகுதியை சேர்ந்தவர் குமாரதாஸ். இவரது மனைவி அஜிதா (வயது 37). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கருங்கலில் இருந்து பூக்கடைக்கு சென்று கொண்டிருந்தார். பனங்குழி அருகே அவர் வந்தபோது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அஜிதா அருகே வந்ததும் அவரது கழுத்தில் கிடந்த செயினை பறித்தனர்.
இதில் சுதாரித்துக் கொண்ட அவர் செயினை இருக்கமாக பிடித்துக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அவரை மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளிவிட்டார். இதில் கீழே விழுந்த அஜிதாவிற்கு தலை, கால் ஆகிய இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.
படுகாயம் அடைந்த அஜிதா கூச்சலிட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் கீழே விழுந்த அஜிதாவின் கழுத்தில் கிடந்த 9 பவுன் செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அஜிதா கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகுமரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.