செய்திகள்
தற்கொலை

புதுப்பெண் தற்கொலை: கணவன்-மாமியாரிடம் ஆர்.டி.ஓ.விசாரணை

Published On 2020-01-29 17:45 GMT   |   Update On 2020-01-29 17:45 GMT
ஈத்தாமொழியில் புதுப்பெண் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கணவன்-மாமியாரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார்.

நாகர்கோவில்:

ஈத்தாமொழி காற்றாடித்தட்டை சேர்ந்தவர் சிவன். கட்டிடத்தொழிலாளி. இவருக்கும் என்.ஜி.ஓ.காலனி கோவில் விளையைச் சேர்ந்த அர்ச்சனா(வயது24) என்பவருக்கும் கடந்த மே மாதம் 29-ந்தேதி திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவன்-மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதை அர்ச்சனா தனது உறவினர்களிடம் கூறி கதறி அழுதுள்ளார். அவர்கள் அர்ச்சனாவை சமாதானம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினமும் அர்ச்சனாவுக்கும், சிவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அர்ச்சனா மனமுடைந்து காணப்பட்டார். நேற்று மாலை வீட்டின் கழிவறையில் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்தார். அர்ச்சனா உடலில் தீ கொளுந்து விட்டு எரிந்தது.

உடலில் எரிந்த தீயுடன் அர்ச்சனா வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார்.சிறிது நேரத்தில் ரோட்டிலேயே கருகி பரிதாபமாக கீழே விழுந்து பலியானார். இதுகுறித்து ஈத்தாமொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த அர்ச்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அர்ச்சனா தற்கொலை செய்து கொண்டது குறித்து பரமேஸ்வரலிங்கம் கொடுத்து புகாரின் பேரில் ஈத்தாமொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 7 மாதத்தில் அர்ச்சனா தற்கொலை செய்து கொண்டதால் அவரது சாவு குறித்து ஆர்.டி.ஓ. மயில் விசாரணை நடத்தி வருகிறார்.


அவரது கணவர் சிவன், மாமியாரிடம் ஆர்.டி.ஓ.விசாரணை நடத்தினார். அர்ச்சனாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையில் பலியான அர்ச்சனாவின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டிருந்தனர்.

பலியான அர்ச்சனாவிற்கு பெற்றோர் இல்லை. உறவினர்களின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். அவருக்கு உறவினர்கள் தான் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு சிவன், மனைவி அர்ச்சனாவை ஒல்லியாக இருப்பதாகவும், அழகாக இல்லை என கூறி சித்ரவதை செய்து வந்ததாக தெரிகிறது. இதை தனது உறவினர்களிடம் கூறி அர்ச்சனா கதறி அழுதுள்ளார். அவர்கள் அர்ச்சனாவை சமாதானப்படுத்தினார்கள். இதற்கிடையில் தற்போது இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News