செய்திகள்
தரகர்களின் புகலிடமாக டிஎன்பிஎஸ்சி மாற்றப்பட்டுள்ளது - முக ஸ்டாலின் குற்றச்சாட்டு
தரகர்களின் புகலிடமாக டிஎன்பிஎஸ்சி மாற்றப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பணம் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களின் தேர்வு ரத்து செய்யப்பட்டதோடு அவர்கள் வாழ்நாள் முழுவதும் அரசு தேர்வு எழுதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முறைகேட்டில் ஈடுபட்டதாக பள்ளிக்கல்வித் துறை உதவியாளர் ரமேஷ், எரிசக்தி துறை அலுவலக உதவியாளர் திருக்குமரன், தேர்வாணைய ஆவண காப்பக கிளார்க் ஓம்காந்தன், இடைத்தரகர்கள், ஆவடி வெங்கட்ரமணன், தேனி பாலசுந்தரராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இடைத்தரகர்களுக்கு பணம் கொடுத்து முதல் 100 இடங்களுக்குள் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டவர்களில் ராமநாதபுரம் வேல்முருகன், கடலூர் ராஜசேகர், சீனிவாசன், ஆவடி சாலேஷா, திருவல்லிக்கேணி நிதீஷ்குமார், ராணிப்பேட்டை கார்த்தி, திருவள்ளூர் வினோத்குமார், பண்ருட்டி சிவராஜ், உளுந்தூர்பேட்டை விக்கி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குரூப்- 4 முறைகேடு தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
குரூப்- 4 முறைகேடு விசாரணை திசை திருப்புவது திட்டமிட்ட உள்நோக்கமாக கருத வேண்டியள்ளது. தற்போது ஏன் தேர்வாணைய அதிகாரிகளை அழைத்து அமைச்சர் பேசுகிறார்? தேர்வு முறைகேட்டில் திமிங்கலங்களை விட்டுவிட மீன் குஞ்சுகளை பிடிக்க முயற்சி நடக்கிறது. குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இத்தனை நாள் எங்கே போயிருந்தார்.
குரூப்- 4 முறைகேடு குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் நடத்த வேண்டும்.
எத்தனை தேர்வுகளில் முறைகேடு நடந்தது. அதன் ஆணிவேர் எங்கு உள்ளது என்பதை விசாரிக்க வேண்டும். விசாரிக்கவில்லை எனில் தி.மு.க. இளைஞரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்ததப்படும். விசாரணை நியாயமாக நடைபெறுவதற்காக அமைச்சர் ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.