செய்திகள்
தமிழில் குடமுழுக்கு - உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது அறநிலையத்துறை
தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் மொழியில் மந்திரங்கள் ஓதப்படும் என ஐகோர்ட் மதுரை கிளையில் இந்துசமய அறநிலைய துறை இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
மதுரை:
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் எனக்கோரிய வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள், அறநிலைய துறையினரை பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் என இந்து சமய அறநிலைய துறை நேற்று பதிலளித்தது. இந்த பதிலை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு நடைபெறும் அனைத்து இடங்களிலும் தமிழில் வேதமந்திரங்கள் ஓதப்படும் என இந்து சமய அறநிலைய துறை இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது
இதைத்தொடர்ந்து, தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா தொடர்பான வழக்குகள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.