செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

2 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி - பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி

Published On 2020-01-29 09:36 GMT   |   Update On 2020-01-29 10:26 GMT
ஒரே நேரத்தில் 2 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை:

ஒரே நேரத்தில் 2 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரி இல்லாத அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க மத்திய அரசின் அனுமதியும், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நிதியுதவியும் வழங்க பிரதமரிடம் நான் கோரிக்கை வைத்து, அதற்கான முன் மொழிவுகள் தமிழ்நாடு அரசால் குறுகிய காலத்தில் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மேற்படி மாவட்டங்களில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க தேவையான நிலம் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

எனது கோரிக்கையினை ஏற்று அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே, 23.10.2019 அன்று தமிழ்நாட்டிற்கு ஒரே நேரத்தில் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு, 27.11.2019 அன்று மேலும் 3 புதிய அரசுமருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றதோடு மட்டுமல்லாமல், தற்போது கூடுதலாக 2 அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

ஓரே ஆண்டில் 11 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று சாதனை ஆகும். இதற்கென 3,575 கோடி ரூபாய்க்கான மதிப்பீட்டிற்கு அனுமதி வழங்கி, அதில் 2,145 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு அனுமதியும் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பங்காக 1,430 கோடி ரூபாய் வழங்கப்படும்.



இதுவரை வரலாறு கண்டிராத இந்த சிறப்பு மிக்க அனுமதியை வழங்கிய பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Tags:    

Similar News