செய்திகள்
தஞ்சையில் அதிக விலைக்கு மது விற்றவர் கைது
தஞ்சையில் அதிக விலைக்கு மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை கிழக்கு போலீஸ் நிலைய போலீசார் பழைய பஸ் நிலையம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திருவையாறு பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒருவர் சாக்குப்பையுடன் நின்று கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
சுதாரித்துக் கொண்ட போலீசார் அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து சாக்கு பையை சோதனை செய்தனர். அதில் 8 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்த நடத்திய விசாரணையில், தஞ்சை வடக்கு அலங்கத்தை சேர்ந்த மனோகரன் (வயது56) என்பதும், அவர் டாஸ்மாக்கில் மது வாங்கி வந்து அதைத் திருட்டுத்தனமாக வெளியே அதிக விலைக்கு விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து மனோகரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.