செய்திகள்
சென்னை ஐகோர்ட்

மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான தேர்வு பட்டியல் ரத்து

Published On 2020-01-28 08:16 GMT   |   Update On 2020-01-28 08:16 GMT
மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான தேர்வு பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்ட ஐகோர்ட்டு நீதிபதி, எழுத்து தேர்வில் பங்கேற்றவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க மோட்டார் வாகன பராமரிப்பு துறைக்கு உத்தரவிட்டார்.
சென்னை:

தமிழகத்தில், 113 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று, கடந்த 2018- ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) விளம்பரம் வெளியிட்டது.

இப்பணிக்கு, எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.

இத்தேர்வுக்கு 2 ஆயிரத்து 176 பேர் விண்ணப்பம் செய்தனர். இதில், 785 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ளவர்களுக்கு, 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது.

விதிகளின்படி, ஒரு பதவிக்கு இரு விண்ணப்பதாரர்கள் என்ற அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட வேண்டும். ஆனால், சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பதாரர்களை அழைக்காமல், 33 பேர் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுக்களில், அங்கீகரிக்கப்பட்ட பணிமனையில் அனுபவச்சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிகளில் திடீர் மாற்றம் கொண்டு வந்து, அந்த பணிமனையில் பணியாளர் வருகைப் பதிவு இல்லை, சேமநல நிதி இல்லை என்பன உள்ளிட்ட காரணங்களைக் கூறி, தங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், 33 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டார்.

புதிய விதிகளின்படி, எழுத்து தேர்வில் பங்கேற்ற ஆயிரத்து 328 விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என்று மோட்டார் வாகன பராமரிப்பு துறைக்கு உத்தரவிட்டார்.



மேலும், இந்த பணிகளை 4 வாரங்களில் முடித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News