செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் குடமுழுக்கு நடத்தப்படும் என ஐகோர்ட் மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது
மதுரை:
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் எனக்கோரிய வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள், அறநிலைய துறையினரை பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்து சமய அறநிலைய துறை சார்பில், தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் என பதிலளித்தது.
இதையடுத்து, இந்த பதிலை நாளை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.