செய்திகள்
கைது

கமுதி அருகே உள்ளாட்சி தேர்தல் விரோதத்தில் பழிவாங்க திட்டமிட்ட 6 பேர் கைது

Published On 2020-01-27 15:52 GMT   |   Update On 2020-01-27 15:52 GMT
கமுதி அருகே 2 துப்பாக்கி, அரிவாள்களுடன் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் உள்ளாட்சி தேர்தல் முன் விரோதத்தில் பழிவாங்குவதற்காக ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கமுதி:

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள தோப்படைப்பட்டியில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் மண்ணில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த கிராமத்தில் வேறு எங்காவது வெடிகுண்டுகள், ஆயுதங்கள் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து போலீசார் பல்வேறு இடங்களை தோண்டி சோதனை நடத்தினர். தோப்படைப்பட்டியில் நேற்று 4 இடங்களில் மண் அள்ளும் எந்திரம், மண்வெட்டிகளால் தோண்டி சோதனை நடத்தப்பட்டது.

அப்போது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த 2 துப்பாக்கிகள், 2 வீச்சரிவாள்கள் கிடைத்தன. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக செல்வகுமார் (வயது 40), ராமலிங்கம் (40), முருகன் (28), அந்தோணி, ஆத்திமுத்து (28), செல்வமேரி ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஓ.கரிசல்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஜெயராமன் என்பவரின் மனைவி ராஜாமணி என்பவரும், பாண்டி என்பவரும் போட்டியிட்டு உள்ளனர். இதில் ராஜாமணி வெற்றி பெற்றார்.

இதை எதிர்த்து பாண்டி வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக பாண்டி தரப்பினரை பழிவாங்க ராஜாமணி தரப்பினர் திட்டமிட்டதாக தெரிகிறது. இதற்காக தான் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தோப்படைப்பட்டி கிராம மக்கள் கூறியதாவது:-

இந்த பகுதியில் ஆயுதங்கள் மறைத்து வைத்திருப்பதாக கூறி போலீசார் வீடுகள், வீடு கட்டும் இடங்களில் எந்திரம் மூலம் குழி தோண்டி ஆய்வு செய்தனர். உள்ளாட்சி தேர்தல் முன் பகையால் ஒரு சிலர் கொடுத்த புகாரை நம்பி விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று துன்புறுத்துகின்றனர்.

இதனால் இப்பகுதி ஆண்கள் வீட்டில் தங்காமல் மனைவி, குழந்தைகளை பிரிந்து காட்டுப்பகுதிகளில் மறைந்து வாழ்கின்றனர். இரவு நேரங்களில் விசாரணை என்ற பெயரில் போலீசார் சாதாரண உடையில் வந்து துன்புறுத்துவதால் பெண்கள் வீடுகளை விட்டு வெளியேற அச்சப்படுகின்றனர். 

இவ்வாறு அவர்கள் கூறினர். 
Tags:    

Similar News