செய்திகள்
பர்கூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதி விவசாயி பலி
பர்கூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் பலத்த காயம் அடைந்த விவசாயி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் குருவிநாயனப்பள்ளி பழைய செக்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (35). விவசாயி.
இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் குருவிநாயனப்பள்ளி செல்ல வீட்டில் இருந்து புறப்பட்டு, கிருஷ்ணகிரி - குப்பம் சாலைக்கு வந்துள்ளார். அப்போது அதேபகுதியில் உள்ள பசவண்ணகோவில் பகுதியை சேர்ந்த சுரேஷ்(21), பழைய செக்போஸ்ட் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார்(19), மணிகண்டன்(21) ஆகிய 3 பேரும் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
இந்த இரண்டு இருசக்கர வாகனங்களும் எதிர்பாரத விதமாக நேருக்குநேர் மோதியதில் தூக்கிவீசப்பட்டது. விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். சுரேஷ் மற்றும் மணிகண்டன் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் ரஞ்சித்குமார் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.