செய்திகள்
திமுக

திருவாரூரில் திமுக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி

Published On 2020-01-27 12:42 GMT   |   Update On 2020-01-27 12:42 GMT
திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான திமுக-வின் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
திருவாரூர்:

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்தினால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும். நீர் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டு டெல்டா மாவட்டங்கள் வறண்ட பாலைவனமாகும். எனவே இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே மத்திய அரசு தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற தேவையில்லை என்றும், மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டியதில்லை என்றும் ஒரு அறிவிப்பை வெளியிட்டதை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் நாளை  திருவாரூரில் போராட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டிருந்தது. முதலில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போலீஸ் எஸ்.பி துரை போராட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளார். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும், இடையூறு இல்லாமல் போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.  

இதேபோல் தஞ்சையில் திமுகவினர் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
Tags:    

Similar News