செய்திகள்
கோப்பு படம்

தேனி அருகே தாட்கோவில் கடன் பெற்று தருவதாக ரூ.9 லட்சம் மோசடி

Published On 2020-01-25 13:30 GMT   |   Update On 2020-01-25 13:30 GMT
தாட்கோவில் கடன் வாங்கித் தருவதாக உறுப்பினர்களை சேர்த்து ரூ.9 லட்சம் மோசடி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ராமச்சந்திராபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த அழகுமலை மனைவி மீனா (வயது 25). இவரிடம் வரு‌ஷநாட்டைச் சேர்ந்த ஜமுனா (வயது 27) என்பவர் தான் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நில அளவையராக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார்.

மேலும் தாட்கோவில் ஒரு நபருக்கு ரூ.5 லட்சம் வரை லோன் வாங்கி தர முடியும் என கூறியுள்ளார். அதன் பேரில் ராமச்சந்திராபுரம் மற்றும் தேவாரத்தைச் சேர்ந்த பல பெண்களை உறுப்பினர்களாக சேர்த்துள்ளார். அதற்காக அவர்களிடம் இருந்து ரூ.9 லட்சத்து 10 ஆயிரம் பணம் வசூல் செய்துள்ளார்.

ஆனால் கடந்த 1½ வருடமாக லோன் வாங்கித் தருவதாக ஏமாற்றி வந்துள்ளார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று விசாரித்த போது ஜமுனா அங்கு பணிபுரியவே இல்லை என தெரிய வந்தது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கட்டிய பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணத்தை தராமல் மிரட்டியுள்ளார்.

இந்த மோசடியில் வரு‌ஷநாட்டைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரும் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து மீனா தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து மோசடி நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News