செய்திகள்
கோப்பு படம்

கள்ளக்காதலனை மது பாட்டிலால் குத்திய பெண் கைது

Published On 2020-01-25 11:30 GMT   |   Update On 2020-01-25 11:30 GMT
வேறு ஒரு வாலிபருடன் பழகியதை தட்டி கேட்டதால் கள்ளக்காதலனை மது பாட்டிலால் குத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள கோவிந்தா புரத்தை சேர்ந்தவர் திருப்பதி (வயது40). கட்டிட தொழிலாளி. இவர் கேரளாவில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார்.

அங்கு வேலை செய்து வந்த திருப்பத்தூர் மாவட்டம் அங்கநாதவலசையை சேர்ந்த மைதிலி (32) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவருக்கும் மது பழக்கம் இருந்தது. மைதிலி மதுபழக்கத்திற்கு அடிமையானதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைதிலியை அவரது சொந்த ஊருக்கு திருப்பதி அழைத்து வந்து விட்டார்.

பின்னர் திருப்பதி கேரளாவிற்கு கட்டிட வேலைக்கு சென்று விட்டார். மைதிலி திருப்பதிக்கு அடிக்கடி போன் செய்து தனக்கு மது வாங்கி தரும்படி தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதனால் திருப்பதி மைதிலி குடியை மறக்க பல மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளார். அதன்பிறகு மீண்டும் கேரளாவிற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

திருப்பதி அடிக்கடி ஊருக்கு வந்து மைதிலியை பார்த்து விட்டு செல்வது வழக்கம். இதற்கிடையில் மைதிலிக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு வாலிபருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

அவருடன் சேர்ந்து மைதிலி தினமும் மது குடித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருப்பதி மைதிலி வீட்டிற்கு வந்தார். அப்போது அங்கு வேறு ஒரு வாலிபருடன் சேர்ந்து மைதிலி மது அருந்துவதை பார்த்து ஆத்திரமடைந்தார்.

இதுகுறித்து தட்டிக் கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த மைதிலி அந்த வாலிபருடன் சேர்ந்து மது பாட்டிலை உடைத்து திருப்பதியின் கழுத்தில் குத்தினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் திருப்பதி மயங்கினார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மைதிலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

பழைய கள்ளக்காதலனை கள்ள காதலி புதிய கள்ளகாதலனுடன் சேர்ந்து  பாட்டிலால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News