செய்திகள்
ஒத்திகையின்போது உதவி கமாண்டன்ட் தேவிகா.

குடியரசு தினவிழா: கடலோர காவல் படை அணிவகுப்பை வழிநடத்தும் தமிழக அதிகாரி தேவிகா

Published On 2020-01-24 02:02 GMT   |   Update On 2020-01-24 02:02 GMT
டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் கடலோர காவல் படையின் அணிவகுப்பை முதல் முறையாக தமிழகத்தை சேர்ந்த பெண் அதிகாரி தேவிகா வழிநடத்தி செல்கிறார்.
சென்னை :

நாட்டின் 71-வது குடியரசு தினம் வருகிற 26-ந்தேதி டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி ராஜபாதையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். மத்திய- மாநில அரசுகள் சார்பில் இந்திய கலாசார சிறப்பை விளக்கும் அலங்கார ஊர்திகளும் இந்த அணிவகுப்பில் பங்கேற்கும். மேலும் வெளிநாட்டு விருந்தினரை கவரும் வகையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மற்றும் சாகசங்களும் இடம் பெறும்.

இதில் ராணுவ வீரர்களின் அணிவகுப்புக்கு தலைமையேற்று வழி நடத்திச் செல்லும் அதிகாரிகளுக்கு என்றுமே தனி மரியாதை எப்போதுமே உண்டு. இந்த ஆண்டு இப்பெருமையை தமிழகத்தைச் சேர்ந்த பெண் கமாண்டன்ட் அதிகாரி தேவிகா என்பவரும் பெறுகிறார்.

இவர், குடியரசு தின விழாவில் 120 வீரர்கள் பங்கேற்கும் கடலோர காவல் படையினரின் அணிவகுப்பை தலைமை ஏற்று வழி நடத்தி செல்கிறார். தமிழகத்தில் இருந்து இச்சிறப்பை பெறும் முதல் பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவிகா, பொள்ளாச்சி அருகேயுள்ள மடத்துக்குளத்தை சேர்ந்த டி.செல்வராஜ் பத்மாவதி தம்பதியினரின் மகள் ஆவார். திண்டுக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பை முடித்தவர். இவரது தங்கை ராதிகா தற்போது சட்டக்கல்வி படித்து வருகிறார். 28 வயது தேவிகா கடற்படை அதிகாரிகள் பயிற்சி மையம் மற்றும் கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய ‘எழிமலா’ கடற்படை பயிற்சி மையத்தில் 6 மாதம் பயிற்சி பெற்றவர். மேலும் கடற்படை பிரிவில் ஓராண்டு துணை பயிற்சியும் பெற்றுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு கடலோர காவல் படையில் பணியில் சேர்ந்தார். தன்னிகரற்ற தனது திறமையால் குறுகிய காலத்தில் முன்னேற்றம் கண்ட தேவிகா அந்தமான் போர்ட் பிளேர் நகரில் உள்ள பிராந்திய கடலோர காவல் படையில் உதவித் தலைமை கமாண்டன்ட் அதிகாரியாக பணியாற்றினார். தற்போது குஜராத்தில் ஒகா நகரில் உள்ள மேற்கு கடலோர காவல் படையில் பணியாற்றி வருகிறார். பாகிஸ்தானியர்களின் ஊடுருவல் பகுதி என்பதால் மிகவும் விழிப்புடன் பணியாற்றும் பொறுப்பு இவருக்கு உள்ளது.

கடலோர காவல் படை பணியில் ஆண் அதிகாரிகள் செய்யக்கூடிய சவாலான பணிகளையும் செய்து அவர்களுக்கு சரிநிகராக பணியாற்றி வருகிறார். சமூகசேவையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். போர்ட் பிளேரில் இருந்து பல மைல் தூரத்தில் உள்ள கார் நிக்கோபார், காம்ப்பெல், கச்சல், கமோர்டா போன்ற இடங்களில் கிராமங்களில் வாழும் பெண் குழந்தைகளுக்கு கல்வி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

கடலோர காவல் படையில் உதவித் தலைமை கமாண்டன்ட் அதிகாரியாக பணியாற்றி வரும் தேவிகா புதிய சமுதாயம் படைக்கும் பெண்களுக்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறார்.
Tags:    

Similar News