செய்திகள்
கைது

திருச்சுழி அருகே காண்டிராக்டர் கொலையில் 4 வாலிபர்கள் கைது

Published On 2020-01-23 15:06 GMT   |   Update On 2020-01-23 15:06 GMT
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே காண்டிராக்டரை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள பாறைக்குளத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39). பில்டிங் காண்டிராக்டரான இவர் மதுரை மாவட்டம், பனங்காடியில் வசித்து வந்தார்.

அப்போது இவரது அக்காள் கணவரை அலங்காநல்லூரைச் சேர்ந்த அரவிந்தன் தரப்பினர் வெட்டிக் கொன்றனர். இதற்கு பழிக்குப்பழியாக அரவிந்தன் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கைதான மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார்.

அரவிந்தன் தரப்பினர் மூலம் மணிகண்டன் உயிருக்கு ஆபத்து இருந்ததால் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் திருச்சுழி அருகே உள்ள குலசேகர நல்லூர் பகுதியில் மர்ம நபர்களால் மணிகண்டன் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏ.டி.எஸ்.பி. மரியராஜ், திருச்சுழி டி.எஸ்.பி. சசிதர் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் அரவிந்தன் கொலைக்கு பழிக்குப்பழியாக கொலை நடந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த வேலன் (வயது 24), வசந்த் (24), விஜய் (24), கார்த்திக் என்ற செல்லப்பாண்டி (24) ஆகிய 4 பேரை விருதுநகர் மாவட்ட போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் அரவிந்தனின் உறவினர்கள் ஆவார்கள்.

Tags:    

Similar News