செய்திகள்
கோப்பு படம்

மதுரையில் தனியார் வங்கியில் ரூ.17½ லட்சம் மோசடி கணவன்-மனைவி மீது வழக்கு

Published On 2020-01-23 12:05 GMT   |   Update On 2020-01-23 12:05 GMT
மதுரையில் தனியார் வங்கியில் ரூ.17½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக கணவன்-மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை கோரிப்பாளையம் பாலம் ஸ்டேசன் ரோட்டை சேர்ந்தவர் வினோத்குமார். தனியார் வங்கியின் பிரதிதியாக உள்ளார். இவர் செல்லூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:-

மதுரை ஞானஒளிவுபுரம் மெய்யப்பன் தெருவை சேர்ந்த பார்த்திபன் என்பவர் வீடு கட்டுவதற்காக தனியார் வீடு கட்டும் நிறுவனத்தில் ரூ. 17 லட்சத்து 40 ஆயிரம் கடன் வாங்கியிருப்பதாகவும் அங்கு வட்டி அதிகமாக இருப்பதாகவும் கூறினார். மேலும் அந்த கடன் கணக்கை உங்கள் வங்கிக்கு மாற்ற விரும்புவதாகவும் கூறினார்.

இதை நம்பி அந்த தனியார் வீடு கட்டும் நிறுவனத்துக்கு எங்கள் வங்கி மூலம் பார்த்திபன் செலுத்த வேண்டிய கடன் தொகையான ரூ.17 லட்சத்து 40 ஆயிரத்து 558 கொடுத்தோம். ஆனால் அங்கு அடமானம் வைத்த வீட்டு பத்திரத்தை எங்கள் வங்கியில் ஒப்படைக்காமல் அதை வேறொரு வங்கியில் கொடுத்து பார்த்திபன் கடன் பெற்றுள்ளார்.

இதன் மூலம் அவர் ரூ.17½ லட்சம் மோசடி செய்துள்ளார். இதற்கு உடந்தையாக அவரது மனைவி இந்திராவும் இருந்துள்ளார். எனவே உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் செல்லூர் போலீசார் விசாரணை நடத்தி பார்த்திபன்-இந்திரா மீது வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
Tags:    

Similar News