செய்திகள்
கொலை

அரக்கோணம் அருகே மாமனாரை அடித்து கொன்ற மருமகன்

Published On 2020-01-22 16:31 GMT   |   Update On 2020-01-22 16:33 GMT
அரக்கோணம் அருகே தகராறில் மாமனாரை அடித்து கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த வேடல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (37). நெசவு தொழிலாளி. இவரது மனைவி அலமேலு(38). இவர் அதே ஊரை சேர்ந்த உறவினரிடம் சீட்டு கட்டி பணம் எடுத்துள்ளார். மனைவியிடம் சீட்டு எடுத்த பணம் இருப்பதை அறிந்த செல்வராஜ் அலமேலுவிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இவர்களது பக்கத்து வீட்டில் அலமேலுவின் தந்தை ஜெயராமன் (60), தம்பி வெங்கடேசன் (35) ஆகியோர் வசித்து வருகின்றனர். செல்வராஜ் அலமேலுவிடம் பணம் கேட்டு தகராறு செய்வதை அறிந்த இருவரும் அவரிடம் தட்டி கேட்டனர்.

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செல்வராஜ் அருகில் இருந்த இரும்பு ராடால் ஜெயராமனின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் ஜெயராமன் மயங்கி கீழே சரிந்து விழுந்தார். அவரது உறவினர்கள் ஜெயராமனை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு ஜெயராமன் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து ஜெயராமனின் மகன் வெங்கடேசன் அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குபதிவு செய்து செல்வராஜ் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தம்பி ஆறுமுகம் (35) ஆகியோரை கைது செய்தனர்.
Tags:    

Similar News