செய்திகள்
பாலக்கோடு அருகே லாரிகள் மோதல்- டிரைவர் பலி
பாலக்கோடு அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பாலக்கோடு:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து தர்மபுரிக்கு கண்டெய்னர் லாரி ஒன்று நேற்று புறப்பட்டு வந்தது. அந்த லாரி பாலக்கோடு அருகே கரத்தாரப்பட்டி அருகே தேசியநெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே தர்மபுரியில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்த மற்றொரு லாரியின் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் தர்மபுரியில் இருந்து லாரியை ஓட்டி வந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் சுரேஷ் (வயது40) என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த பாலக்கோடு போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.