செய்திகள்
புதுவையில் அரசு பஸ் மோதி என்ஜினீயர் பலி
புதுவையில் இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுச்சேரி:
புதுவை ஒதியம்பட்டை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சபரிநாதன் (வயது 23).
என்ஜினீயருக்கு படித்திருந்த அவர், புதுவை 100 அடி சாலையில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை பணிக்கு செல்வதற்காக ஒதியம்பட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தார். 6 மணி அளவில் அவர் இந்திராகாந்தி சிலையை வந்தடைந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த புதுவை அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த அவர் அந்த இடத்திலேயே உயிர் இழந்தார்.
இது தொடர்பாக வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.