செய்திகள்
தஞ்சையில் ஆற்றில் டைவ் அடித்த என்ஜினீயரிங் மாணவர் பாறை மோதி பலி
தஞ்சையில் ஆற்றில் டைவ் அடித்த என்ஜினீயரிங் மாணவர் பாறை மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள எல்.ஐ.சி காலனியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் அருண் குமார் (வயது 24). இவர் என்ஜினீயரிங் முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார்.
சம்பவத்தன்று அருண்குமார் தென்வெட்டு காரதெரு 20 கண் பாலம் அருகே உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது டைவ் அடித்து ஆற்றில் குதித்தபோது பாறை மீது தலைகுப்புற விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அருண்குமார் இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.