செய்திகள்
குடோனில் பிடித்த தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்

திருவள்ளூர் அருகே குடோனில் தீ விபத்து

Published On 2020-01-20 08:03 GMT   |   Update On 2020-01-20 08:03 GMT
திருவள்ளூர் அருகே குடோனில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் குடோனில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த ஈக்காடு பகுதியில் பழைய பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவர் ஜனார்த்தனன். நேற்று மாலை அவர் குடோனை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் மாலை 6.30 மணி அளவில் குடோனில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் புல்லரம்பாக்கம் போலீசுக்கும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

திருவள்ளூர், செவ்வாப்பேட்டை பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்து ஏற்பட்ட குடோன் அருகிலேயே குடியிருப்புகள் இருந்ததால் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து ஈக்காடு பகுதி இளைஞர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் தீ குடியிருப்பு பகுதிக்குள் பரவாமல் தடுக்கப்பட்டது.

சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் குடோனில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. சேத மதிப்பு பல லட்சம் இருக்கும். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Tags:    

Similar News