ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்ததும் விளக்கம் தருகிறேன்- உதயநிதி ஸ்டாலின் பேட்டி
சென்னை:
துக்ளக் வார இதழ் நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “ஒருவர் முரசொலி வைத்திருந்தால் தி.மு.க.காரர் என்று கூறிவிடலாம். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று கூறிவிடலாம்” என்று பேசினார்.
‘அறிவாளிகள் முரசொலியை படிக்க மாட்டார்களா’ என்று பலரும் சமூக வலை தளங்களில் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள்.
அதே நிகழ்ச்சியில், சோ. ராமசாமியை பக்தவச்சலமும், கலைஞரும் வெவ்வேறு காலகட்டத்தில் எதிர்த்தனர், அந்த எதிர்ப்பை பயன்படுத்தி தான் சோ மிகவும் பிரபலமானார்’ என மற்றொரு விமர்சனத்தையும் தி.மு.க. மீது ரஜினி வைத்தார்.
ரஜினிகாந்த்தின் இந்த கருத்துக்கு தி.மு.க. சார்பில் மூத்த தலைவர்கள் பதில் சொல்லவில்லை. உதயநிதி தான் பதில் அளித்தார்.
“முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரிய லெட்சுமினா அம்மா கால் நூற்றாண்டாக கால் பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே தி.மு.க.க்காரன். நான் தி.மு.க.க்காரன்’’ எனப் பதி விட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஜினியின் பேச்சுக்கு பிறகு உதயநிதி பதிவு செய்யும் டுவிட்கள் அந்த சர்ச்சைகளை அடுத்த தளத்துக்கு கொண்டு சென்றன. உதயநிதியின் டுவிட்களில் ரஜினியை தான் குறிப்பிடுகிறார் என ரஜினியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உதய நிதியை விமர்சித்து வருகின்றனர்.
இவற்றுக் கெல்லாம் இதுவரையில் எந்த விளக்கமும் கொடுக்காமல் இருந்த உதயநிதி முதன்முறையாக பேசியிருக்கிறார்.
அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் சைக்கோ படத்துக்கு புரமோஷன் செய்யும் பணிகளில் அவர் இப்போது ஈடுபட்டிருக்கிறார். இதற்காக ஒரு இணையதளத்துக்கு கொடுத்த பேட்டியில் ரஜினியை டுவிட்டரில் விமர்சிப்பது ஏன் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அந்தக் கேள்விக்குப் பதில் சொன்ன உதயநிதி “நான் ரஜினியை வைத்துதான் டுவிட் பதிவு செய்கிறேன் என எதை வைத்துச் சொல்கிறீர்கள். அவர் இப்போது வரையிலும் அரசியலுக்கு வரவில்லை. அவர், அரசியலுக்கு வரட்டும். அதன் பிறகு நான் இந்த கேள்விக்கான பதிலைச் சொல்கிறேன்” என கூறியிருக்கிறார்.