ஆரணி அருகே கடப்பாறையால் குத்தி மேஸ்திரி படுகொலை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சைதாப்பேட்டை கமண்டல நாகநதி தெருவை சேர்ந்தவர் காசி. இவரது மகன் சுரேஷ் (வயது41). மேஸ்திரி. நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சுரேஷை பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் முள்ளிப்பட்டு ஏரிக்கரை அருகே நேற்று நடந்து சென்ற சிலர் அங்கு வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுரேஷ் அண்ணன் பால சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்ததில் அங்கு பிணமாக கிடந்தது தனது தம்பிதான் என்பதை உறுதி செய்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி. செந்தில், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
சுரேஷை கத்தியால் கழுத்தறுத்து மார்பு பகுதியில் கடப்பாறையால் குத்தி கொலை செய்து தூக்கி வந்து வீசிவிட்டு சென்றுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து முன்விரோதம் காரணமாக யாராவது சுரேஷை கொலை செய்தார்களா அல்லது காணும் பொங்கலை முன்னிட்டு மதுபானம் அருந்தியபோது போதையில் ஏற்பட்ட சண்டையால் கொலை செய்தார்களா? என்பது உள்பட பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.