செய்திகள்
தா.பேட்டையில் வாகனம் மோதி வாலிபர் பலி
தா.பேட்டையில் நடந்து சென்ற வாலிபர் மீது வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தா.பேட்டை:
தா.பேட்டை நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சதீஷ்குமார் (வயது29). தா.பேட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் காலை நடை பயிற்சிக்காக தா.பேட்டை - துறையூர் செல்லும் மெயின் ரோட்டில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது ஆராய்ச்சி சமத்துவபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சதீஷ்குமார் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு துறையூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட சதீஷ்குமார் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தா.பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.