செய்திகள்
பொங்கல் பண்டிகை மது விற்பனை

பொங்கல் பண்டிகை மது விற்பனை ரூ.600 கோடி - கடந்த ஆண்டை விட அதிகம்

Published On 2020-01-18 20:30 GMT   |   Update On 2020-01-18 20:30 GMT
பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.606 கோடியே 72 லட்சத்துக்கு மது விற்பனை ஆகி இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதத்துக்கு அதிகமாக விற்பனை நடந்துள்ளது.
சென்னை:

தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட மது விற்பனை அதிகமாக இருக்கும். அந்த வகையில் புத்தாண்டு பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.315 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் பொங்கல் பண்டிகை கடந்த 14-ந்தேதி முதல் களை கட்ட தொடங்கியது. இதனால் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையும் கல்லா கட்டி இருக்கிறது.

கடந்த 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை (16-ந்தேதி மட்டும் விடுமுறை) டாஸ்மாக் கடைகளில் ரூ.606 கோடிக்கு மது விற்பனை ஆகி இருப்பதாக தகவல்கள் கிடைத்து இருக்கின்றன.

கடந்த 14-ந்தேதி (போகி பண்டிகை) ரூ.178 கோடியே 44 லட்சம், 15-ந்தேதி (பொங்கல்) ரூ.253 கோடியே 39 லட்சம், 17-ந்தேதி (காணும் பொங்கல்) ரூ.174 கோடியே 89 லட்சம் என மொத்தம் ரூ.606 கோடியே 72 லட்சத்துக்கு பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ஆகி இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதத்துக்கு அதிகமாக விற்பனை ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை விடுமுறை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுடன் முடிகிறது. இந்த 2 நாட்களில் (சனி, ஞாயிற்றுக் கிழமை) சுமார் ரூ.380 கோடி வரை மது விற்பனை ஆகும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில் பார்க்கும்போது, பொங்கல் பண்டிகை விடுமுறையில் டாஸ்மாக் கடைகளில் மொத்தம் ரூ.986 கோடிக்கு மேல் மது விற்பனை ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News