வல்லம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி படுகாயம்
வல்லம்:
தஞ்சையை அடுத்துள்ள வல்லம் அருகே உள்ள திருக்கானூர்ப்பட்டி மாதாகோவில் கம்மாளத் தெருவை சேர்ந்தவர் கமலம் (வயது 70). சம்பவத்தன்று இவர் திருக்கானூர்பட்டியில் உள்ள அவரது வயலுக்கு சென்று விட்டு தஞ்சை -புதுக்கோட்டை சாலையில் வந்துள்ளார். அப்போது அந்த சாலையில் வாலிபர் ஒருவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டி கமலம் மீது படுவேகமாக மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தஞ்சை விளாரை சேர்ந்த கமலத்தின் மகன் முருகேசன்(42) வல்லம் போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து வல்லம் போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் பாலமுருகன்(20) மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.