செய்திகள்
புகார் கொடுக்க வந்த திராவிட விடுதலை கழகத்தினர்.

நடிகர் ரஜினிகாந்த் மீது திருப்பூர் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்

Published On 2020-01-18 04:02 GMT   |   Update On 2020-01-18 04:02 GMT
பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது திருப்பூர் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் திராவிட விடுதலைக் கழகத்தினர் புகார் மனு அளித்துள்ளனர்.
திருப்பூர்:

திராவிட விடுதலைக் கழகத்தின் மாநில பொருளாளர் துரைசாமி தலைமையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

சென்னையில் கடந்த 14-ந்தேதி நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1971-ஆம் ஆண்டு சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த பேரணியில் ராமன், சீதை ஆகியோரின் உருவங்கள் எடுத்து சென்றது தொடர்பாக ஒரு அப்பட்டமான பொய்யை பேசியுள்ளார்.

இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலை பரப்பி அதன் வழியாக தமிழகத்தில் பெரியார் மீது மக்கள் கொண்டிருக்கின்ற நல்லெண்ணத்தை சிதைக்க வேண்டும் என்ற தீய உள்நோக்கத்தோடும், தங்கள் எஜமானர்களை மகிழ செய்ய வேண்டுமென்று ரஜினிகாந்த் பேசியதாகவே நாங்கள் நம்புகிறோம்.

பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வதந்தியை பரப்பி பொது அமைதியை குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 மற்றும் 505 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

இதேபோல் நேற்று கோவையிலும் நடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகத்தினர் பெரியாரை அவதூறாக பேசியதாக புகார் கொடுத்துள்ளனர்.
Tags:    

Similar News