செய்திகள்
விபத்து

இருவேறு விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி

Published On 2020-01-17 18:28 GMT   |   Update On 2020-01-17 18:28 GMT
ஆண்டிப்பட்டி மற்றும் உத்தமபாளையம் பகுதிகளில் நடந்த இருவேறு விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் இறந்துபோனார்கள்.
ஆண்டிப்பட்டி:

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி அனுமன்நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சிவராமகிருஷ்ணன் (வயது 20). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சிவராமகிருஷ்ணன் தனது நண்பர்களுடன் மூணாறுக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றுலா சென்றார். சிவராமகிருஷ்ணன், தனது நண்பர் மணிகண்டனுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்தார். அவர்கள், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சண்முகசுந்தரபுரம் விலக்கு பகுதியில் வந்தபோது, எதிரே தேனியில் இருந்து மதுரை நோக்கி லாரி ஒன்று வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சிவராமகிருஷ்ணன் வந்த மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இந்த விபத்தில் அவரும், உடன் வந்த மணிகண்டனும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சிவராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மணிகண்டன் பலத்த காயத்துடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, லாரியை ஓட்டி வந்த ஆண்டிப்பட்டியை சேர்ந்த திவாகர் என்பவரை கைது செய்தனர்.

இதேபோல் உத்தமபாளையம் அருகே உள்ள க.புதுப்பட்டி சி.எஸ்.ஐ. பள்ளி தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (68). இவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மகாலிங்கம் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள சாலையோரம் நடந்து வந்தார். அப்போது கம்பத்தில் இருந்து உத்தமபாளையம் நோக்கி வந்த கார் மகாலிங்கம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மகாலிங்கம் இறந்து போனார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News