ஜேடர்பாளையம் படுகையணை பகுதியில் உள்ள ராஜா வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜேடர்பாளையம் படுகையணை ராஜா வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி
பதிவு: ஜனவரி 17, 2020 23:51
கோப்பு படம்
பரமத்திவேலூர்:
நாமக்கல் அருகே உள்ள புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நவனி ஊராட்சியில் 1-வது வார்டு உறுப்பினராக தேர்வு பெற்று பதவியேற்றுக் கொண்டவர் குமார் (வயது 39). இவர் நேற்று தனது நண்பர்களுடன் ஜேடர்பாளையம் படுகையணை பூங்காவிற்கு சுற்றுலா வந்துள்ளார்.
பின்னர் படுகையணை பகுதியில் உள்ள ராஜா வாய்க்காலில் குளித்துள்ளனர். அப்போது குமார் மற்றும் புதுச்சத்திரத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் சரண் (24) ஆகிய இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் குமாரை காப்பாற்றி ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அடித்துச் செல்லப்பட்ட சரண் தண்ணீரில் மூழ்கி இறந்தார். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மீனவர்கள் உதவியுடன் அவர் பிணமாக மீட்கப்பட்டார்.
தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.