செய்திகள்
ரஜினிகாந்த்

ரஜினிகாந்துக்கு கொளத்தூர் மணி கண்டனம்

Published On 2020-01-17 08:39 GMT   |   Update On 2020-01-17 08:39 GMT
சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த பேரணி குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு கொளத்தூர் மணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1971 -ம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த பேரணியில் ‘ராமன், சீதை’ ஆகியோர் உருவங்கள் நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசியுள்ளார்.

இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலைப் பரப்பி அதன் வழியே தமிழகத்தில் பெரியார் மீது மக்கள் கொண்டிருக்கிற நல்லெண்ணத்தை சிதைக்க வேண்டும் என்ற தீய உள்நோக்கோடும், தங்கள் எஜமானர்களை மகிழச் செய்ய வேண்டும் என பேசப்பட்டதாகவே நாங்கள் நம்புகிறோம். இந்த பொய்யான தகவலைப் பரப்பியதற்காக நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக பொதுவெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வதந்தியைப் பரப்பி பொது அமைதியைக் குலைக்கும் ரஜினிகாந்த் மீது அனைத்து காவல் நிலையங்களிலும் கழகத் தோழர்களும் பெரியார் பற்றாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் உடனடியாக புகார் கொடுக்க வேண்டும்.

சின்ன வி‌ஷயங்களுக்கெல்லாம் வழக்கு போடும் தமிழக அரசு பெரியாரை இழிவு படுத்தியதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News