செய்திகள்
கே.எஸ்.அழகிரி

தி.மு.க.-காங்கிரஸ் இடையே கருத்துவேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி

Published On 2020-01-17 01:52 GMT   |   Update On 2020-01-17 01:52 GMT
தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே எந்தவொரு வி‌‌ஷயத்திலும் கருத்து வேறுபாடு இல்லை. மு.க.ஸ்டாலினுடன் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் நல்ல உறவு உண்டு என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
சென்னை :

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவரிடம் புதிய நிர்வாகிகள் நியமனம், தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்து கருத்துகளை தெரிவித்தேன். துரைமுருகன் என்ன பேசியுள்ளார்? என்பது பற்றி எனக்கு தெரியாது. அதை தெரிந்துகொண்டபின் கருத்துகளை தெரிவிக்கிறேன்.

தி.மு.க.-காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கும், உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிக்கைக்கும் சம்பந்தம் இல்லை. அது முழுக்க முழுக்க உள்ளாட்சி சம்பந்தமானது. தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியான மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கக்கூடிய கூட்டணி. யாருக்கும் எதிராக அறிக்கையில் சொல்லவில்லை.



மு.க.ஸ்டாலினுடன் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் நல்ல உறவு உண்டு. நல்ல புரிதல் உண்டு. 2 கட்சிகளிலும் கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு பல சிரமங்கள் இருக்கிறது. போதுமான இடங்களை பெறவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது. இடங்களை கொடுக்க முடியாமல் அவர்களும் சிரமப்படுகின்றனர். இதுதான் உண்மை நிலை.

தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே எந்தவொரு வி‌‌ஷயத்திலும் கருத்து வேறுபாடு இல்லை. தமிழக சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று முதல்-அமைச்சராக வரவேண்டும் என்பதிலும் மாற்று கருத்து கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News