பொங்கல் பண்டிகையை கொண்டாட கணவன் அழைத்து செல்லாததால் பெண் தற்கொலை
சேதராப்பட்டு:
புதுவை அருகே தமிழக பகுதியான இடையாஞ்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் ரகு. தச்சு தொழிலாளி. இவருக்கும் சேதராப்பட்டை சேர்ந்த சிவபெருமாளின் மகள் வாணிஸ்ரீக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
வாணிஸ்ரீ திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் அழகுநிலையம் நடத்தி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் புதிதாக வீடு கட்டி குழந்தைகளுடன் கணவன்-மனைவி இருவரும் வசித்து வந்தனர். இதற்கிடையே ரகுவுக்கு வேறோரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக வாணிஸ்ரீ எண்ணினார். இதனால் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு வாணிஸ்ரீ கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் 2 மாதமாக சேதராப்பட்டில் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ரகு தனது பெற்றோருடன் மாமனார் வீட்டுக்கு வந்து பொங்கல் பண்டிகையை கொண்டாட குழந்தைகளை மட்டும் அழைத்து சென்றார். இதனால் வாணிஸ்ரீ மனமுடைந்தார். பொங்கல் பண்டிகையை கொண்டாட கணவன் தன்னை அழைத்து செல்லவில்லையே என விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வாணிஸ்ரீ உருக்கமான கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை. எனவே தற்கொலை செய்து கொள்கிறேன். என்று எழுதி வைத்துவிட்டு மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.