செய்திகள்
பாஜக

பஞ்சாலை தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்

Published On 2020-01-14 11:57 GMT   |   Update On 2020-01-14 11:57 GMT
பஞ்சாலை தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் என்று பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி:

புதுவை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பஞ்சாலை தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கணக்காக சம்பளம் வழங்காத இந்த சூழ்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையிலும் அனைத்து தொழிற்சங்க தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். ஆனால் இது சம்பந்தமாக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வழக்கம்போல் கவர்னரை காரணம் காட்டி தப்பிக்க நினைக்கிறது.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஒருகுழு கவர்னரை சந்தித்தது. அவர்களிடத்தில் விஜயன் கமிட்டி அறிக்கையை அமல்படுத்த வேண்டுமென்றால் விஜயன் கமிட்டி அறிக்கை படி குளோசர் நோட்டீஸ் கொடுத்தால் தான் பணம் வழங்கப்படும் என கூறினர்.

முதல்-அமைச்சர், அமைச்சர்கள் கவர்னரை நேரில் சென்று இந்த பிரச்சினையை பற்றி கலந்துரை செய்யாமலே, ஊழியர்களிடத்தில் பொய்யான தகவலை, பரப்பி வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தாத காங்கிரசை, பா.ஜ.க வன்மையாக கண்டிக்கிறது. இதனால் ஒட்டுமொத்த தொழிலாளர் குடும்பங்களும் நடுத்தெருவில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது.

கேரள மாநிலத்துக்கு புதுவை மாநில முதல்- அமைச்சர் நிதியில் இருந்து மழை நிவாரண நிதியாக ரூ.1 கோடியும், அமைச்சரின் டீசல் பாக்கி ரூ.2½ கோடி கொடுத்து உடனே சரி செய்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, ஏழை தொழிலாளர்களின் அனைத்து குடும்பங்களின் நிலையை பற்றி கவலைப்படாமல் இருப்பது அவருடைய தொழிலாளர் விரோதப் போக்கை தெளிவாக காட்டுகிறது.

உடனடியாக விஜயன் கமிட்டி பரிந்துரைபடி தொழிலாளர்களுக்கு சம்பள நிலுவை தொகையை உடனடியாக வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News