செய்திகள்
துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

மத்திய அரசு பாதுகாப்பு விலக்கப்பட்டதில் உள்நோக்கம் இல்லை - ஓ.பன்னீர்செல்வம்

Published On 2020-01-10 22:10 GMT   |   Update On 2020-01-10 22:10 GMT
மத்திய அரசு பாதுகாப்பு விலக்கப்பட்டதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஆலந்தூர்:

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் மூலம் பாதுகாப்பு அளிக் கப்பட்டு இருந்தது. எனக்கு பாதுகாப்பு தேவையில்லை என கருதியதால் அது விலக்கப்பட்டு உள்ளது. இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றில் அ.தி.மு.க.வின் நிலையான, உறுதியான நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களான இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு எந்தவித ஒரு சிறு இடர்பாடுகூட வராமல் அவர்களின் முழு நலனையும் தமிழக அரசு சார்பில் பாதுகாக்கப்படும் என்று சட்டமன்றத்தில் உறுதி அளித்தோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே இது கடைப்பிடிக்கப்படும் நடைமுறை ஆகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை் அரசு சார்பில் தெரிவித்து கொள்கிறேன். அந்த குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் மற்றும் பல்வேறு உதவிகள் செய்யப்படும்.

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் அ.தி.மு.க.வின் கொள்கைகளை விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் குறித்து மக்களுக்கு விளக்கி கூறப்படும்.

இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கை காப்பதிலும், நிர்வாக திறமையிலும் தமிழகம் முதல் நிலை மாநிலமாக இருப்பதை மத்திய அரசு பிரகடனப்படுத்தி உள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் மாநிலமாக தமிழகம் தொடர்ந்து இருக்கும்.

ஆங்கிலோ-இந்தியர்களுக்கு தொடர்ந்து பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு. இது பற்றி மாநிலங்களவையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பரிசீலிப்பதாக சம்பந்தப்பட்ட துறை மந்திரி தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News