ரூ.30 லட்சம் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை: கணவர்- மாமனார் மீது புகார்
கோவை:
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சாலை பகுதியில் வசித்து வருபவர் செந்தில். பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகள் கிருத்திகா (26). இவருக்கு திருச்சி சங்கிலியாண்ட புரத்தை சேர்ந்த முகுந்தன் (34) என்பவருக்கும் கடந்த 23.11.2017 அன்று திருமணம் நடைபெற்றது. முகுந்தன் கனடாவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.திருமணத்தின் போது 150 பவுன் நகை, ரூ. 6 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முகுந்தன் வெளிநாடு சென்று மேல் படிக்க வேண்டும் என கிருத்திகாவிடம் ரூ. 30 லட்சம் பணம் வாங்கி வருமாறு அடித்து சித்ரவதை செய்துள்ளார். இதற்கு முகுந்தனின் தந்தை கிருஷ்ண மூர்த்தி, தாய் வாசுகி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.
கணவர் சித்ரவதை செய்ததால் கிருத்திகா தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார். இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் முகுந்தன், அவரது தந்தை கிருஷ்ண மூர்த்தி, தாய் வாசுகி ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.