திருவெண்ணைநல்லூரில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்-மாணவன் கைது
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 17). இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ஐ.டி.ஐ.யில் படித்து வந்தார். காரப்பட்டு பகுதியில் இவர் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சிறுமியிடம் சிவா நைசாக பேசினார். பின்னர் அவரது வீட்டுக்கு அழைத்து சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்த சம்பவத்தை யாரிடமும் கூறக்கூடாது என அந்த சிறுமியை சிவா மிரட்டி அனுப்பினார். இதில் பயந்து போன சிறுமி தனக்கு நடந்த துயரத்தை யாரிடமும் சொல்லாமல் இருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த சிறுமி அடிக்கடி வயிறு வலிப்பதாக அவரது பெற்றோரிடம் கூறினார்.
உடனே அந்த சிறுமியை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று சிறுமியிடம் விசாரித்தனர்.
அப்போது அந்த சிறுமி தனக்கு நடந்த துயரத்தை போலீசாரிடம் கூறினார். இதையடுத்து போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவன் சிவாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.