செய்திகள்
தற்கொலை

மகள் காதல் திருமணத்தால் தந்தை வி‌ஷம் குடித்து உயிரிழப்பு

Published On 2020-01-08 05:49 GMT   |   Update On 2020-01-08 07:23 GMT
திருவலம் அருகே மகள் வேறு சமூக வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
ஆற்காடு:

காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை பெரிய தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 40) விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு 2 மகள் ஒரு மகன் உள்ளனர். இரண்டாவது மகள் திவிதா (வயது 19) இவருக்கும் மேல்பாடியை சேர்ந்த ஷியாம் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி கடந்த 2-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறி பெங்களூருக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் தனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி திவிதா அவரது காதல் கணவருடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

இதை தொடர்ந்து காதல் ஜோடி மேல்பாடி போலீஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ரவி தனது மகளை தங்களுடன் வந்து விடும்படி மன்றாடினார். இதற்கு மறுப்பு தெரிவித்து திவிதா காதல் கணவருடன் சென்றுவிட்டார்.

இதனால் மனமுடைந்த ரவி நேற்று இரவு பயிர்களுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேல்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News