தொழிலாளியை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொலை மிரட்டல்- வாலிபருக்கு வலைவீச்சு
பாகூர்:
தவளக்குப்பம் இளவரசன் நகரை சேர்ந்தவர் பகலவன் (வயது 45). கூலி தொழிலாளி. சம்வத்தன்று இவர் தனது வீட்டு வாசலில் தன்னுடன் வேலை பார்க்கும் குமார் என்பவருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது தவளக்குப்பம் சடா நகரை சேர்ந்த சிலம்பு (22) என்பவர் குமாரை பார்த்து நீ எப்படி இங்கு நிற்கலாம் என கேட்டு தகராறு செய்தார்.
இதனை பகலவன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சிலம்பு தகாத வார்த்தைகளால் திட்டி கிரிக்கெட் மட்டையால் பகலவனை சரமாரியாக தாக்கினார். மேலும் இதுபற்றி போலீசில் புகார் தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.
இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த பகலவன் தவளக்குப்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து சிலம்புவை தேடி வருகின்றனர்.