செய்திகள்
கோப்பு படம்

நாகர்கோவில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் மோசடி பெண் கைது

Published On 2020-01-07 09:02 GMT   |   Update On 2020-01-07 09:02 GMT
நாகர்கோவில் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் ரெயில்வே காலனியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் மகேஷ்(வயது31). என்ஜினீயரிங் முடித்து வேலை தேடி வந்தார்.

இந்த நிலையில் நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் ஒருவர் அவரது உறவினர் மூலம் அறிமுகமானார். அந்த பெண் மகேசிடம் வெளிநாட்டில் என்ஜினீயர் வேலை வாங்கி தருவதாக கூறினார். மேலும் அதற்கு பணம் செலவு ஆகும் என தெரிவித்தார்.

இதனை நம்பிய மகேஷ், அந்த பெண்ணிடம் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தார். இதையடுத்து அந்த பெண் மகேசை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக ஏற்பாடு செய்தார். பின்னர் மகேசை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் சொந்த ஊர் திரும்பினார். அந்த பெண்ணிடம் தான் கொடுத்த ரூ.1 லட்சம் பணத்தை திரும்பி தரும்படி கூறினார். ஆனால் அந்த பெண் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.

இதுகுறித்து நாகர்கோவில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் மகேஷ் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தாமஸ் லைசா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாஜிகுமார் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் மகேசிடம் பணம் வாங்கிக் கொண்டு திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியது நேசமணி நகரைச் சேர்ந்த கிளாடிஸ் விஜி(48) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கேரளா மற்றும் குமரியில் ஏஜென்சி நடத்தி வருவது தெரிய வந்தது. மேலும் பல நபர்களிடம் மோசடி செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
Tags:    

Similar News