செய்திகள்
தாக்குதல்

நாங்குநேரி அருகே ஆசிரியர் மீது தாக்குதல்: மகன்களுக்கு வலைவீச்சு

Published On 2020-01-06 10:23 GMT   |   Update On 2020-01-06 10:23 GMT
நாங்குநேரி அருகே ஒய்வூதிய பணத்தை சகோதரிகளுக்கு பங்கிட்டு கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் தந்தையை தாக்கிய மகன்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி வடக்குத்தெருவை சேர்ந்தவர் டேனியல் (வயது 88). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு ராஜாராம் சாமுவேல், மோகன்ராய் என்ற 2 மகன்களும், செல்வி, சத்தியசீலி என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகிவிட்டது. டேனியல் தனது ஒய்வூதிய பணத்தை 4 பேருக்கும் பங்கிட்டு கொடுத்து வந்தார். தந்தை சகோதரிகளுக்கு பணம் கொடுப்பது ராஜாராம் சாமுவேல், மோகன்ராய் ஆகியோர்களுக்கு பிடிக்க வில்லை. இதனால் அவர்கள் சகோதரிகளுக்கு பணம் கொடுக்க கூடாது என்று தந்தை டேனியலை கண்டித்து வந்தனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று டேனியல் தனது பென்‌ஷன் பணத்தை எடுத்துக் கொண்டு மோகன்ராய் வீடு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மோகன்ராய், ராஜாராம் சாமுவேல் ஆகியோர்களுக்கும் டேனியலுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராஜாராம் சாமுவேல், மோகன்ராய் ஆகியோர் டேனியலை கல்லால் தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

இதில் படுகாயமடைந்த டேனியல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தந்தையை தாக்கிய மகன்கள் ராஜாராம் சாமுவேல், மோகன் ராய் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News